வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பிரதான ரயில் வழித்தடத்தில் குறிப்பாக விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில் பாலத்தில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியில் செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது ? - விவரம் :
=> சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் இரயில், தேஜஸ் விரைவு இரயில், சோழன் விரைவு இரயில், குருவாயூர் விரைவு இரயில், பாண்டிச்சேரி MEMU இரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
=> விழுப்புரம் முதல் தாம்பரம் வரை செல்லக்கூடிய MEMU பயணிகள் இரயில்,
=> புதுச்சேரி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய விரைவு இரயில்,
=> காரைக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய பல்லவன் அதிவிரைவு இரயில்,
=> மதுரையிலிருந்து புறப்படும் வைகை அதிவிரைவு இரயில்,
=> திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் விரைவு இரயில்
- முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
=> மேலும் தஞ்சாவூரில் இருந்து புறப்படும் உழவன் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில், காரைக்காலில் இருந்து புறப்படும் விரைவு ரயில், சிலம்பு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் காட்பாடி வழியாக மாற்று வழி பாதையில் இயக்கப்படுகிறது.
அதோடு பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் சென்னை நோக்கி வரும் இரயில்கள் விழுப்புரம் இரயில் நிலைய சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் தென் மாவட்டத்திற்கு செல்லும் இரயில்கள், நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.