பீகார் மாநிலத்தில் உள்ள ஜோகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது இர்ஃபான் (வயது 33). கூலி தொழிலாளியான இவர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று அங்கு கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளார்.
அந்த வகையில் இவர், சில நாட்களுக்கு பீகாரில் இருந்து கொள்ளையடிப்பதற்காக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் லக்சிகாப்பூல் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியை நோட்டம் விட்டு வந்துள்ளார்.
ஆனால், அங்கு பாதுகாப்பு அதிகம் இருந்ததால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு அரசு ஊழியரான அனுராதா ரெட்டி என்பவர் வீட்டை உடைத்து, அங்கிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சொந்த ஊரான பிகாருக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் கொள்ளையடிக்க தெலங்கானா திருப்பிய அவரை சந்தேகத்தின் பேரில் லக்சிகாப்பூல் என்ற இடத்தில போலிஸார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அனுராதா ரெட்டியின் வீட்டில் திருடியது அவர்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது.
அதோடு , அவர் இதுவரை டெல்லி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் வசதியானவர்களின் வீட்டில் கொள்ளையடித்து அந்த பணத்தில் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு கொடுத்ததும் தெரியவந்தது. இதுவரை ஏராளமானோருக்கு மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்கு இவர் பணம் கொடுத்ததையும் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர்.