மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சனா கான் என்ற பெண். அம்மாநிலத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக இருந்து வந்த இவருக்கு அமித் (எ) பப்பு சாஹு என்ற கணவர் இருக்கிறார். அமித், ஜபல்பூர் அருகே சாலையோரத்தில் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி சனா கான், தனது கணவர் அமித்தை சந்திக்க நாக்பூரில் இருந்து ஜபல்பூருக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரது தாயை தொடர்பு கொண்டு கூறி விட்டு சென்ற அவர், மறுநாள் (2ம் தேதி) மீண்டும் தொடர்பு கொண்டு தான் ஜபல்பூரை வந்தடைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சனா கான் அவரது தாயையும் தொடர்பு கொள்ளவில்லை, அவரது மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்தே சனா கானின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து அவரது கணவரிடமும் விசாரித்தனர். அப்போது தனது மனைவி சனா கானை தான்தான் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் சம்பவத்தன்று சனா கானுக்கும், அவரது கணவர் அமித்துக்கும் பண பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறவே ஆத்திரத்தில் அமித், தனது மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மறைக்க எண்ணிய அமித், அவரது உடலை ஜபல்பூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரன் ஆற்றில் வீசிவிட்டதாக அமித் வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அமித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஆற்றில் வீசப்பட்ட சனா கானின் உடலை மீட்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமித்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக பெண் நிர்வாகியை பண பிரச்னை காரணமாக கணவரே கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.