கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று பல முற்போக்குவாதிகள் குரல்களை எழுப்பினர். தொடர்ந்து சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என 2018-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் சில கும்பல் பெண்களுக்கு அனுமதி வழங்காமல் மறுப்பு தெரிவித்து வந்தது.
மேலும் அவ்வாறு செல்லம் பெண்களுக்கு பலரும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதைத்தொடர்ந்து கேரள அரசும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள போலீசாருக்கு உத்தரவிட்டது. அனைவரது உதவியோடு ஒரு சில பெண்கள் சபரிமலைக்குள் சென்றுவிட்டனர். அவ்வாறு இது போல் உள்ளே செல்ல முயன்ற ஒரு பெண் தான் ரெஹானா பாத்திமா.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா, அந்த பகுதியில் அமைந்துள்ள BSNL நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருமுடிக் கட்டி சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் சிலரின் எதிர்ப்புகளால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து மத நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் வேலை பார்த்து வந்த BSNL நிறுவனத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பிள்ளைகளை வைத்து அவரது உடலில் ஓவியம் தீட்டினார். அதாவது ரெஹானா பாத்திமா, தனது அரை நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து வண்ணம் பூசி ஓவியம் வரையச்செய்தார்.
அதோடு இதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றமும் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்ததோடு மட்டுமின்றி அவர் மீது புகாரும் கொடுத்தனர். எனவே ரெஹானா பாத்திமா மீது போக்சோ மற்றும் ஐடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் அளித்த தீர்ப்பு பின்வருமாறு :
"ஒரு ஆண் சட்டை அணியாமல் சென்றால் அதை ஆபாசம் அல்லது கண்ணிய குறைவாக இந்த சமூகம் பார்ப்பதில்லை. இந்த கண்ணோட்டம் பெண்கள் அப்படி இருந்தால் கவர்ச்சி, ஆபாசமாக பார்க்கப்படுகிறது. பெண்களின் நிர்வாணம் எப்போதுமே கவர்ச்சி, ஆபாசம், ஒழுக்கக்கேடு, கண்ணியகுறைவு என்று அதை கருதக்கூடாது. நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு.
ஒரு தாயின் அரை நிர்வாண மேல் உடம்பில் தனது சொந்த குழந்தைகள் கலைப் படைப்புக்காக வர்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது என்று சொல்ல முடியாது. இதில், குழந்தைகள் பாலியல் விஷயத்துக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என்று கூற முடியாது. பாலியல் செயலை தூண்ட பயன்படுத்துகின்றனர் என கூறுவது இரக்கமற்றது.
அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விஷயங்களும் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்படி பெண்கள் தங்களுடைய சொந்த உடல் தொடர்பாக முடிவு எடுக்க அடிப்படை உரிமை உள்ளது. எனவே ரஹனா பாத்திமா மீதான வழக்குகளை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பு வழங்கினார்.