உலகம் முழுவதும் ஏராளமான கார் நிறுவனங்கள் இருந்தாலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா இந்த இரு நிறுவனங்களே இந்திய சந்தையில் கோலோச்சுகின்றன. அதே நேரம் மாருதி சுஸுகி நிறுவனமும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் தங்களை நிலைநிறுத்த போராடி வருகிறது.
பொதுவாக இந்தியர்கள் பிற வசதிகளை விட பாதுகாப்பான கார்களை தேர்வு செய்வதால் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றன.டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவன கார்கள் எப்போதும் பாதுகாப்பு விவகாரத்தில் முன்னுரிமை கொடுப்பதால் அந்த நிறுவன கார்கள் இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
கடைசியாக வந்த 'குளோபல் NCAP' வெளியிட்ட பாதுகாப்பான கார்கள் பட்டியலில் கூட ஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வரவான 'ஸ்கார்பியோ N' வகை கார் 5 ஸ்டார்களை பெற்று மிகவும் பாதுகாப்பான காராக தேர்வு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய இரு கார் மாடல்களும் ஏற்கனவே ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் காரும் ப்ரஸ்டோ ரக காரும், இக்னிஸ் ரக காரும் 1 புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் ரக காரும் 'குளோபல் NCAP' வெளியிட்ட பாதுகாப்பான கார்கள் பட்டியலில் வெறும் 1 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பது சோதனையில் மாருதி சுசூகி வேகன் ஆர் அதிகபட்சமாக 34 புள்ளிகளில் 19.69 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. கார் முன்பக்க சோதனையில் 6.7 புள்ளிகளையும், பக்கவாட்டு சோதனையில் 13 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த தகவல் மாருதி சுசூகி கார்கள் வைத்திருக்கும் நபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.