ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தள்ளுவண்டியில் கொண்டு சென்றுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், ஹவுரா பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) அந்த இரயில் புதுவைக்கு வந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் கொல்கத்தாவில் இருந்து ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், அந்த இரயில் நேற்று புதுவை அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு பதற்றமடைந்த சிறுவனின் குடும்பத்தினர், உடனடியாக இரயில்வே துறையினரை உதவிக்கு அழைத்தனர். பின்னர் அவர்கள் உதவியோடு ஆம்புலன்ஸை அழைத்தனர்.
அதன்பேரில் தகவலறிந்து புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விரைந்து வந்து இரயில் நிலைய வாசலில் நின்றது. பின்னர் அதன் ஸ்ட்ரெச்சரை வருகைக்காக குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் அந்த ஆம்புலன்ஸின் ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து இருந்ததால், அதனை உள்ளே எடுத்து வர இயலவில்லை. இதையடுத்து திகைத்து போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், உடனடியாக அருகில் இருந்த தள்ளுவண்டியை பயன்படுத்த எண்ணினர்.
அதாவது இரயில் நிலையத்தில் உள்ள பார்சேல், லக்கேஜ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் தள்ளுவண்டியை பயன்படுத்தி சிறுவனை படுக்க வைத்து வாசல் வரை தள்ளிக்கொண்டே ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து சிறுவவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்சில், பொதுவாக இருக்ககூடிய எந்தவொரு வசதியும் இல்லாத நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறுகையில், "ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தள்ளுவண்டியில் கொண்டு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.