கேரள மாநிலம் தலசோரி மாவட்டம் கொடியேரி பகுதியைச் சேர்ந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், கேரள மாநிலத்தின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில், கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். முன்னதாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகி, கேரளாவில் உள்ள ஏ.கே.ஜி சென்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வெடுத்து வந்தார்.
பின்னர் தீவிர உடல்நிலை பாதிப்பை அடுத்து சென்னை கீரிஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கொடியேரி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.