டெல்லியில் உள்ள வசிராபாத் பகுதியில் இளைஞர் ஒருவர் திருடியதாக நினைத்து அவரை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை கம்பத்தில் கட்டி தலையில் மொட்டை அடித்து கால்வாயைச் சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அந்த இளைஞர் பெயர் ஷகீல் என்றும் தெரியவந்துள்ளது.
அதேபோல் ஒரு வீட்டிலிருந்து தண்ணீர் பம்பை திருடும்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸாரிடம் அவரை பிடித்துக் கொடுக்காமல் பொதுமக்களே அவரை தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கு வேடிக்கை பார்த்திருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.