குஜராத் மாநிலம், சோஜித்ரா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பூனம்பாய் பர்மாரின். இவரது மருமகன் கேதன் பதியார். இவர் சோஜித்ரா கிராமத்தின் அருகே நேற்று காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட உடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய எம்.எல்.ஏ மருமகன் கேதன் பதியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை முடிந்த உடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.