பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று இரவு மது விருந்து நடைபெறுவதாகவும், அதில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட நட்சத்திர விடுதியில் போலிஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது மது விருந்திலிருந்த போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கிருந்த அனைவரிடத்திலும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதில் ஐந்து பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்த போதை விருந்தில் பங்கேற்ற அனைவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இதில் பாலிவுட் நடிகர் சாக்தி கபூரின் மகன் சித்தாந்த கபூரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இதனால், கர்நாடகா முழுவதும் இந்த செய்தி பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு போதை விருந்தில் கலந்து கொண்டதாக நடிகர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் முன்னாள் அமைச்சர் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் போதை விருந்தில் பிரபல நடிகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.