இந்தியா

ஆசிரியர்களுக்கான தண்ணீரை குடித்த தலித் மாணவி: சாதி ரீதியில் பேசி தாக்கிய ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் அந்த ஆசிரியர் கல்யான் சிங், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

ஆசிரியர்களுக்கான தண்ணீரை குடித்த தலித் மாணவி: சாதி ரீதியில் பேசி தாக்கிய ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆசிரியர்களுக்கான குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவியை உதவி ஆசிரியர் ஒருவர் தாக்கியதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மஹூபா மாவட்ட கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட்.

உத்தர பிரதேச மாநிலத்தின் மஹூபா மாவட்டத்தில் உள்ள சிக்காரா என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில்தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஏழாம் வகுப்பு படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாணாக்கர்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் குடத்தில் குடிநீர் இல்லாததால் ஆசிரியர்களுக்கான குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்திருக்கிறார்.

இதனைக் கண்ட உதவி ஆசிரியரான கல்யான் சிங் என்பவர், அந்த மாணவி மீது தாக்குதலை கையாண்டிருக்கிறார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி பள்ளியில் ஆசிரியர் தன்னை தாக்கியது குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக கிராம மக்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் அந்த ஆசிரியர் கல்யான் சிங், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து விசாரணை நடத்தி நடவடிகை மேற்கொள்ளும்படி மஹூபா கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் ஜிதேந்திர சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையில், இதற்கு முன் தான் இது போன்று பாகுபாடோடு நடத்தப்பட்டதில்லை என பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரித்ததில், “குடத்தில் கையை விட்டு தண்ணீரை எடுத்து குடித்ததற்காக திட்டினேன், மாணவியை தாக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories