ஆந்திரா மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் தங்களின் செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், இந்த மருத்துவனையில் பெரிய வசதிகள் எதுவும் இல்லை. அங்கு இருக்கும் ஜெனரேட்டர் கூட பழுதடைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக நோயாளிகள் கொசுகடியால் தவித்து வருகின்றனர். இந்த மருத்துவமனை ஒரு நரகம் போல் உள்ளது என தெரிவத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறிய விளக்கத்தில், "மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு சில மணி நேரம் இன்வெட்டர் ஜெனரேட்டர் செயல்பட்டது. ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் வராததால் ஜெனரேட்டர் பழுதடைந்தது.மேலும் ஜெனரேட்டருக்கான டீசலும் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.