இளைஞர்கள், இளம் சிறார்கள் கஞ்சா, மது, புகை போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாவது அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தரப்பில் இருந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எப்படியாவது போதை வஸ்துக்கள் சிறுவர்கள், இளைஞர்களிடத்தில் சென்றடைந்து விடுகிறது.
இதனால் மிகுந்த கவனத்துடனேயே இந்த விவகாரத்தை கையாளப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் தனது மகன் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதை அறிந்த தாய் ஒருவர் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக மிளகாய் பொடியை தூவிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது.
தெலங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கொத்தடா கிராமத்தில் நடந்த சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இந்த தண்டனைதான் போதை பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான சிறந்த முறை எனவும் பதிவுட்டு வருகிறார்கள்.
கொத்தடா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்லாமல் கஞ்சா போதைக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்திருக்கிறான். இதனால் அவனை திருத்துவதற்காக சிறுவனின் தாய் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போயிருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஓய்ந்துப்போன அந்த தாய், கஞ்சா போதைக்கு அடிமையான மகனை திருத்துவதற்காக வீட்டு வாசலில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துவம்சம் செய்ததோடு அச்சிறுவனிடம் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதியளிக்க கேட்டிருக்கிறார்.
அப்போது அவன் தயங்கியதால் அவனது கண்களில் மிளகாய் பொடியை தூவியிருக்கிறார். இதனால் துடிதுடித்துப்போன அச்சிறுவன் கடைசியாக கஞ்சா பக்கமே செல்ல மாட்டேன் எனக் கூறியிருக்கிறாராம்.
இந்த சம்பவத்தால் கொத்தடா கிராமப் பகுதியினரிடையே பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதனையடுத்து தகவல் அறிந்த சூரியபேட் போலிஸார் உடனடியாக விரைந்து தாய் மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்திருக்கிறார்களாம்.