இந்தியா

“ஷாருக் கான் மகன் வழக்கில் ‘திடுக்’ திருப்பம்” : முக்கிய சாட்சி திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய சாட்சி திடீரென மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஷாருக் கான் மகன் வழக்கில் ‘திடுக்’ திருப்பம்” : முக்கிய சாட்சி திடீர் மரணத்தால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய சாட்சி திடீரென மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். சொகுசு கப்பலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில், தனியார் புலனாய்வாளர் கேபி கொசாவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

ஆர்யன் கான் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட பிரபாகர் தாக்கல் செய்த அறிக்கையில், “சொகுசு கப்பலின் வரவேற்பறையில் இருந்தபோது, கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டும்படி என்னிடம் தெரிவித்தனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் படங்களை அனுப்பினர்.

ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு என்னிடம் வெற்று ஆவணங்களில், கொசாவியும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரி சமீர் வான்கடேவும் கையெழுத்து வாங்கினர். சமீர் வான்கடே மற்றும் கொசாவி இருவரும் கூட்டாகச் சதி செய்துள்ளனர்.

நான் காரில் அமர்ந்திருந்தபோது, சாம்டி சூசா என்பவரிடம் ரூ.25 கோடி அளவுக்கு போன் மூலம் கொசாவி பேரம் பேசியதை நான் கேட்டேன். அதில், ரூ.8 கோடி சமீர் வான்கடேவிடம் வழங்கப்பட்டுவிட்டது.

கொசாவியிடம் இருந்து பணம் பெற்று, சாம் டி சூசாவிடம் நானே நேரில் சென்று, டிரிடன்ட் ஓட்டல் அருகேயுள்ள பகுதியில் ஒப்படைத்தேன். அப்போது பணம் எண்ணப்பட்டபோது, அதில் ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபாகர் திடீரென மரணமடைந்துள்ளார். மும்பை செம்பூரில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் இருக்கும்போது திடீரென நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியிருந்து வந்து பிரபாகரிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் பிரபாகர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories