அமெரிக்காவில் இருந்து நேற்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேற்று இரவு 8.45 மணிக்கு திடீரென டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மோடி உடனடியாக இந்த ஆய்வை மேற்கொண்டது ஏன் என்பது குறித்த காரணங்கள் அரசியல் வட்டாரத்தில் உலவி வருகின்றன.
5 நாள் அமெரிக்க பயணத்தில் குவாட் மீட்டிங் தொடங்கி ஐ.நா பேச்சு வரை பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டார் இந்திய பிரதமர் மோடி. ஆனால், எதிலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றபோது அவரை வரவேற்க அதிபர் ஜோ பிடன் செல்லவில்லை. துணை அதிபர் கமலா ஹாரிஸும் செல்லவில்லை. விமான நிலையத்திலும் மோடிக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.
போதாக்குறைக்கு, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் பாதையில் பதாகைகள் ஏந்தியும் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்காவின் துணை அதிபரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ், மோடியுடனான சந்திப்பு குறித்து ட்வீட் கூட செய்யவில்லை.
ஜாம்பியா அதிபருடன் நடந்த சந்திப்பு குறித்தெல்லாம் ட்வீட் செய்த கமலா ஹாரிஸ், மறுநாள்தான், அதுவும் பலரும் கோரிக்கை வைத்த பின்தான் மோடியுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்தார்.
அதிபருடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அவரை வழியனுப்பக் கூட அதிபர் ஜோ பிடன் வெளியே வரவில்லை.
அமெரிக்க ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் மோடியின் அமெரிக்க பயணம் குறித்தும், உரை குறித்தும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடவில்லை.
தொடர் புறக்கணிப்புகளால் அதிர்ச்சியடைந்த மோடி, ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதற்காகவே இந்தியா திரும்பியதும், திரும்பாததுமாக புதிய நாடாளுமன்ற கட்டிட ஆய்வில் ஈடுபட்டு விதவிதமாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.