நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஒன்றிய பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். அதற்கு பல தரப்பிடம் இருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கின.
அந்த வகையில் பாஜகவினர் தம்பட்டம் அடித்துக்கொண்ட பெருமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அவர் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற போது, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்னை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அது தொடர்பாக எந்த போட்டோவோ அல்லது வீடியோவொ ஏதும் எடுத்து வெளியிடவில்லை.
ஆனால் தற்போது போட்டோ எடுப்பதும் வீடியோவாக பதிவு செய்து அதனை வெளியிடுவதாகவுமே உள்ளது. இது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. இதுதான் மோடி அரசாங்கத்தின் நாடகம்” எனக் கூறியிருந்தார். விஜேந்தர் சிங்கின் பேச்சை காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஜித் சிங் ஆமோதித்திருந்தார்.
மேலும், உண்மையை பேசியிருப்பதன் மூலம் மக்களின் உள்ளங்களை விஜேந்தர் சிங் வென்றுள்ளதோடு மோடி அரசின் நாடகங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்” என ட்விட்டரில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இதனிடையே விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியதற்கும் விஜேந்தர் சிங் விமர்சித்திருந்தார். அதில், “அவர்களால் பெயர்களை மட்டுமே மாற்ற முடியும். இன்னும் சில காலத்திற்குள் இந்தியாவின் பெயர் USA (அமெரிக்கா) என்றும் மாறிவிடும்” எனக் குறிப்பிட்டு மோடி அரசாங்கத்தை சாடியிருந்தார்.