இந்தியா

“கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு” - டி.ராஜா சாடல்!

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளே இந்திய பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டது என சி.பி.ஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

“கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு” - டி.ராஜா சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகளே இந்திய பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய டி.ராஜா, “இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு முன்பிருந்தே இந்திய பொருளாதாரம் நலிந்துபோய் இருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டதும் மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் வரிதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்.

கொரோனா பாதிப்பால் கல்வித்துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஸ்மார்ட் போன் வாங்க வசதி இல்லாத குழந்தைகள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் குழந்தைகள் என புதிய ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது.

மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர், பிரதமர் அறிவித்த அறிவிப்புகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரு முதலாளிகள் கொள்ளை அடிக்கும் அறிவிப்புகளாக உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறார்கள். அந்நிய முதலீடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள். கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்க முயல்கிறது ஒன்றிய அரசு.

இந்தியாவில்தான் அதிக மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2020ல் அதை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தயாராவதை விடுத்து அமெரிக்க அதிபரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு” - டி.ராஜா சாடல்!

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்துவிட்டது. பா.ஜ.க மக்களின் செல்வாக்கை இழந்துவருகிறது. மோடியின் தவறான கொள்கைதான் இதற்கு காரணம். ஸ்டேன்சாமி மரணம் அல்ல அது கொலை.

சாதிகள் இல்லாத இந்தியாதான் தேவை என ஆர்.எஸ்.எஸ் பேசத் தயாரா? இந்தியாவை நெருக்கடியில் இருந்து மீட்க்கவேண்டும் என்றால் பா.ஜ.க-வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். நாட்டையும் மக்களையும் காப்பாற்ற பா.ஜ.க-விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்.

கொங்கு நாடு குறித்து பேசுபவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தற்போது கடன்கார மாநிலமாக உள்ளது. தி.மு.க அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறது. தி.மு.க அரசை இந்திய கம்யூனிட் கட்சி பாராட்டுகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு அதை புரிந்து கொள்ளவில்லை. தி.மு.கவை ஆதரிக்க வேண்டும் என்பதற்ககாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியா போன்ற பெரிய நாட்டில் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலம் நீட் தேர்வை எதிர்த்தாலும் அதை நிறுத்த வேண்டும். எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொள்வதற்காகவும் வகுப்புவாதத்தையும் மதவாதத்தையும் கையில் எடுக்கவும் பா.ஜ.க முயல்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories