மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரத்திற்குட்பட்ட கடாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திராபதி சிங். இவரது மகள் கடந்த 5 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி தவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், விசாரணை நடத்திவிட்டு, பெண்ணின் தந்தையிடம்,"உங்கள் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும். எனவே உடலை சிங்ராலியில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து வாருங்கள்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஏழை தொழிலாளியான திராபதி சிங் எப்படி உடலை எடுத்துச் செல்வது என யோசனையிலிருந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகளிடம் ஏதாவது வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா என உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து திராபதி சிங் பெண்ணின் உடலை கயிற்றுக் கட்டலில் கிடத்தினார். பின்னர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உதவியுடன் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடந்தே சென்றுள்ளார்.
இது குறித்து திராபதி சிங் கூறுகையில், "நாங்கள் காலை 9 மணிக்கு எனது மகளின் உடலை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். மாலை 4 மணிக்குத்தான் மருத்துவமனை வந்தடைந்தாம். கட்டிலை எங்கள் தோள்களில் சுமந்தே வந்ததால் இப்போது எங்களுக்கு உடல்நிலை சரியில்லை. இது எவ்வளவு பெரிய பிரச்சனை. ஆனால் யாரும் இதற்கு தீர்வு காணவில்லை" என வேதனையுடன் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலங்களில் இப்படியான சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஆளும் பா.ஜ.க அரசு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் மக்கள் வேதனைப்படுவதை பார்த்து ரசித்து வருகிறது. ஏழை மக்களுக்கு இலவசமாக அமரர் ஊர்தி ற்றும் ஆம்புலன் சேவைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.