உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தீவிரத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வரும் நிலையில், பசு காப்பகங்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்துமாறு யோகி ஆதித்யநாத்தின் பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தர பிரதேசம் சிக்கித் திணறிவருகிறது. ஆக்சிஜன் சிலிண்டருக்காக வீதியில் அலையும் மக்கள், நீண்ட வரிசையில் மயானங்களில் காத்துக் கொண்டிருக்கும் சடலங்கள், படுக்கை வசதி இல்லாமல் காரிலேயே காத்திருக்கும் மக்கள் என உத்தர பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு கொரோனா காட்சிகளும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றது.
இந்த நெருக்கடியான சூழலில் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், பசுமாடுகளைப் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பது போல் இருக்கிறது இவரின் உத்தரவு.
பசுக்களுக்கான முகாம்கள் அனைத்திலும், கொரோனாவுக்கான தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும், இந்த முகாம்களில் வெப்பநிலை பரிசோதிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும், ஆக்சிஜன் பரிசோதிக்கும் ஆக்ஸிமீட்டர்களை பயன்படுத்தி மாடுகளைத் தினமும் பரிசோதிக்கவும் ஆணையிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 268 பசு பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதாகவும், இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
பசுமாடுகளுக்கு முகாம்கள் அமைத்து, அவற்றில் எத்தனை மாடுகள் பராமரிக்கப்படுகின்றன என புள்ளி விவரங்களை வெளியிடும் யோகி ஆதித்யநாத் அரசிடம், கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்?, மாநிலத்தில் எத்தனை படுக்கை வசதிகள் இருக்கிறது?, ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளதா? என்பன போன்ற தகவல்கள் வராது. ஆனால் கேள்வி கேட்பவர்களை மட்டும் பா.ஜ.க அரசு மிரட்டும் என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.