புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 91வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தாலுகா வாரியாக மகா பஞ்சாயத்து கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டங்களுக்கு விவசாயிகள் லட்சக்கணக்கில் கூடி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று மத்திய அரசின் அடக்கு முறைக்கு எதிரான நாளாக விவசாயிகள் கடைபிடிக்கிறார்கள். இதனை ஒட்டி ஒவ்வொரு தாலுக்கா மற்றும் மாவட்ட அளவில் விவசாயிகள் கூடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பும் போராட்டத்தை இன்று நடத்துகிறார்கள்.
நாளை விவசாய இளைஞர்கள் தினமாகவும், நாளை மறுநாள் விவசாயிகள் ஒற்றுமை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. 28ஆம் தேதி மூன்றாம் கட்ட போராட்டம் குறித்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள்.
இதனிடையே, 40 லட்சம் டிராக்டர்களுடன் விரைவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.