இந்தியா

‘காலநிலை மாற்றம்’ பிரச்னை பற்றி ஒரு வார்த்தையும் இடம்பெறாத மத்திய பட்ஜெட் - பூவுலகின் நண்பர்கள் சாடல்!

2021-2022 நிதிநிலை அறிக்கை சூழலியல் பார்வையில் இந்தியாவை பல பத்தாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

‘காலநிலை மாற்றம்’ பிரச்னை பற்றி ஒரு வார்த்தையும் இடம்பெறாத மத்திய பட்ஜெட் - பூவுலகின் நண்பர்கள் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2021-2022 நிதிநிலை அறிக்கை சூழலியலில் இந்தியாவை பல பத்தாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “2021-2022ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். பட்ஜெட் உரையில் வேளாண்மை குறித்த அறிவுப்புகளை வெளியிடும்போது “ Our Government is committed to the welfare of farmers” என்று தொடங்கினார். இதைப் பேசும்போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கூச்சலெழுப்பினர். இது வெறும் வெற்றுக் கூச்சல் இல்லை என்பதை பட்ஜெட் அறிவிப்புகளில் வேளாண்துறைக்கும் வேளாண் குடிகளுக்கும் மத்திய அரசு இழைத்துள்ள பெரும் துரோகத்தை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.

வேளாண்துறைக்கு 2020-2021 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட இந்த ஆண்டு 8% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.34 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 1.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 1.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் வெறும் 5% உயர்த்தி மட்டுமே இந்த ஆண்டு வேளாண்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படாது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் அரசின் வாக்குறுதிக்கு நேர்மாறாக உள்ளது. குறிப்பாக MSP நடைமுறைப்படுத்தப்படுவவதை உறுதி செய்யும் MIS-PSS மற்றும் PM-AASHA என்கிற திட்டங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்து வருகிறது. MIS-PSSக்கு இந்த ஆண்டு 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2020-2021 பட்ஜெட்டில் 25% குறைவு, 2019-2020ல் இருந்து 50% குறைவாகும்.

PM-AASHA திட்டத்திற்கு 2019-2020ல் 1,500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெறும் 400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான PM-KISANக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்து 13% குறைவாகும். ஜனவரியில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை PM-KISAN திட்டத்தின் மூலம் இந்தியாவில் 14 கோடி பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் இருப்பதாகவும், இதில் 9 கோடி விவசாயிகள் மட்டுமே பயன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் இந்த ஆண்டு அத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நிதி ஒதுக்கப்படவில்லை.

PMFBY திட்டத்திற்கும் கடந்த பட்ஜெட்டை விட 4% உயர்த்தி மட்டுமே இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய நேரத்தில் காப்பீட்டு பணம் கிடைக்காவிட்டால் அவர்கள் மேலும் கடனாளி ஆகி தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 43 நகரங்களில் காற்று மாசுபாட்டை தடுக்க 2,217 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜெட்டிலும் மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க ரூ.4,400 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகு மாநில அரசுகளுடன் பேசி ஒரு வரைவு கட்டமைப்பு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று “Implementation of Budget Announcements 2020-2021” ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பது ஒரு கண் துடைப்பு மட்டுமே என்பது அமபலமாகிறது.

அதேபோல, பழைய மற்றும் அதிக மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூடப்படும் என கடந்த பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்ட பின்னர் 1,260 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 15 அலகுகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதுவும் காற்று மாசுபாட்டை தடுக்க போதுமான நடவடிக்கையாக இல்லை. சுற்றுச்சூழல் துறையை பொருத்தமட்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறத்திற்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரமிக்க GB Pant Himalayan Institute of Environment and Development, Indian Council of Forestry Research and Education, Indian Institute of Forest Management, Indian Plywood Industries Research and Training Institute and Wildlife Institute of India ஆகிய ஐந்து அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

‘காலநிலை மாற்றம்’ பிரச்னை பற்றி ஒரு வார்த்தையும் இடம்பெறாத மத்திய பட்ஜெட் - பூவுலகின் நண்பர்கள் சாடல்!

இவற்றிற்கு கடந்த ஆண்டு 340 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 305 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Wildlife Institute of India விற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு 34 கோடியிலிருந்து 25.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை பொறுத்தவரை National Adaptation Fund-ற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 80கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 60 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 18 ஆயிரம் கோடி ரூபாயில் பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த பேருந்துகள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளாக இருப்பதையும் தனியாருக்கு வழங்காமல் அரசு கழகங்களுக்கே இதை ஒதுக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு யாரிடம் மின்சாரத்தை பெறவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வகையில் தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் ஊக்குவிப்போம் என்று அறிக்கப்பட்டதும் மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளான சென்னை - சேலம் விரைவுச் சாலையின் பணிகளை இந்த ஆண்டே தொடங்குவோம் என்ற அறிவிப்பும் அதிர்ச்சியளிக்கிறது. பல முக்கியமான, அவசியமான திட்டங்களுக்கான நிதியை குறைத்துவிட்டு அவசியமற்ற சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. காலநிலை மாற்றம் என்ற ஒரு வார்த்தை கூட மத்திய அமைச்சர் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை. வரக்கூடிய பத்தாண்டுகள்தான் காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் தாக்கத்தை கட்டுப்படுத்த நமக்கிருக்கும் முக்கியமான காலம் என்று NRDC தெரிவித்துள்ள நிலையில் காலநிலை மாற்றம் குறித்து போதுமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்காவின் அதிபர் தேர்தலையே தீர்மானிக்கும் பிரச்னையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் உலகில் அதிகம் கார்பனை உமிழும் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள இந்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories