கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 24,908,975 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 841,331 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1021 பேர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 34,63,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 62,550 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 17 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபத்தாராயிரம் பேர் பலி ஆகியுள்ளனர். உயிரிழப்பு 1.81% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 76.47% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய 4வது ஊரடங்கு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கு தளர்வு குறித்து பேசும் மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.