கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொலைக்காட்சி வழியாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டுகிறது. இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது. இதனால் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத சூழலே நிலவு உள்ளது.
இந்த சூழலில், மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மலையில் குடில் அமைத்து கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சிந்துதுர்க், கன்கவாலி டரிஸ்டே அருகிலுள்ள சுதர்வாடி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வப்னாலி சுதார்.
இவர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் கால்நடை மருத்துவத்தில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பி விட்டார். தற்போது, ஆன்லைன் வகுப்பு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது கிராமத்தில் செல்போன் சிக்னல் இல்லை.
எனவே தமது சுதர்வாடி கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையில் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்த ஸ்வப்னாலி, அங்கு சிறியகுடில் அமைத்து அங்கேயே காலை ஏழுமணி முதல் இரவு ஏழு மணி வரை படித்து வருகிறார்.
அவருடைய மொபைல் போன் சார்ஜ் இல்லாம்ல் அணைந்துவிடுவதைத் தவிர்க்க ஸ்வப்னாலியின் ஆசிரியர் ஒருவர் “பவர் பேங்க்” ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார். மாணவர்கள் குடும்ப நிலைமைகளை உணராமல் அவசரகதியாக ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதால், ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அதனால் மனவேதனை அடைந்த பல மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையும் அரங்கேறியுள்ளது. எனவே இதுதொடர்பாக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.