இந்தியா

"எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி” - பா.ஜ.க அரசின் EIA2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 வரைவு, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக நடிகர் கார்த்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

"எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி” - பா.ஜ.க அரசின் EIA2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையில் ஏராளமான சூழலியல் அபாயங்கள் காணப்படுவதாக சூழலியலாளர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வரைவை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 வரைவு, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக நடிகர் கார்த்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நடிகரும், உழவன் அறக்கட்டளை நிறுவனருமான கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு : குறள்‌ 739.

பொருள் : முயற்சி செய்து தேடாமலேயே தரும்‌ வளத்தை உடைய நாடுகளைச்‌ சிறந்த நாடுகள்‌ என்று கூறுவர்‌, தேடிமுயன்றால்‌ வளம்‌ தரும்‌ நாடுகள்‌ சிறந்த நாடுகள்‌ அல்ல”

மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள்‌ போற்றும்‌ நம்‌ இந்தியாவில்‌, இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல்‌ சட்டங்களே, நம்‌ இயற்கை வளங்களையும்‌ மக்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌ பாதுகாக்க போதுமானதாக இல்லை.

ஆனால்‌ தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும்‌ 'சுற்றுச்சூழல்‌ தாக்க மதிப்பீட்டு விதிகள்‌ 2020 வரைவு நம்‌ இந்திய நாட்டின்‌ சுற்றுச்சூழலுக்கு மேலும்‌ அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும்‌, ஆறுகளும்‌, பல்வகை உயிரினங்களுமே நம்‌ வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும்‌, விவசாய நிலங்களையும்‌ அழித்து நெடுஞ்சாலைகள்‌ போடுவதும்‌, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள்‌ அமைப்பதும்‌ நிச்சயம்‌ வளர்ச்சி அல்ல.

இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின்‌ அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின்‌ எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும்‌ முயற்சி. அதை மக்களால்‌ தேர்ந்தெடுக்கபட்ட அரசு ஒருபோதும்‌ அனுமதிக்கக் கூடாது.

இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை, மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்று இருக்கும் ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

"எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி” - பா.ஜ.க அரசின் EIA2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி!

நம் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான சட்டமாக இருக்கும்?

குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதிலும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டது ஏன்? தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளை அறிந்துகொள்ள வேண்டாமா?

நாட்டிற்கான முன்னேற்றங்கள்‌ தேவை என்பதில்‌ நமக்கு எந்த மாற்று கருத்தும்‌ இல்லை. ஆனால் கொரோனா எனும்‌ அரக்கப்‌ பிடியில்‌ நாம்‌ அனைவரும்‌ சிக்கி, மீள போராடிக்‌ கொண்டிருக்கும்‌ இந்த வேளையில்‌, நம்முடைய வாழ்வாதாரத்தையும்‌, முக்கியமாக நமது வரும்‌ சந்ததியினரின்‌ வாழ்வையும்‌ நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்‌?

"எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி” - பா.ஜ.க அரசின் EIA2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி!

எனவே, இந்த வரைவு அறிக்கையின்‌ சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும்‌ கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின்‌ கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும்‌ கடைசி வாய்ப்பை நாம்‌ நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌. eia2020-moefcc@gov.in என்கிற மின்னஞ்சல்‌ முகவரியில்‌, ஆகஸ்ட்‌ 11ம் தேதிக்குள்‌ நம்‌ கருத்துக்களை பதிவு செய்வோம்‌.

அறிஞர்கள்‌,ஆய்வாளர்கள்‌ கருத்துகளுக்கும்‌, மக்களின்‌ உணர்வுகளுக்கும்‌ மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில்‌ கொண்டு வர வேண்டுமென மக்களில்‌ ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்‌”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories