கொரோனா ஊரடங்கு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்தச் சூழலில், ‘சுயசார்பு பாரதம்’ திட்டத்தின் கீழ் நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது 41 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.
இந்த நிலக்கரி சுரங்களை வர்த்தக சுரங்கப் பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஸ்விக்கியும் இணைந்து ஏல நடைமுறைக்கு ஏற்பாடு செய்துள்ளன. 2 கட்ட மின்னணு ஏல நடைமுறைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக மோடி அரசு திட்டங்களை அறிவிக்கும்போது, அரசுக்கு லாபம் வரும் எனக் கூறி வந்தது. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டத்தின் மூலமும் அரசுக்கு பெரிய அளவில் முதலீடு வரவில்லை என்பதே நிலை. அதுமட்டுமின்றி, பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்கு உழைப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த ஏலத்தில் சுற்றுச்சூழலை சீரழித்தது தொடர்பாக வழக்கு உள்ள வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.