ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சோனாலி போகட். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதன்பிறகு பா.ஜ.கவில் தன்னை முழுமையாக இனைத்துக்கொண்ட சோனாலி போகட், அடிக்கடி தனது தொகுதிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தவகையில், நேற்றைய தினம் அப்பகுதியில் உள்ள விவசாயச் சந்தையை ஆய்வு செய்தார். அப்போது சில விவசாயிகள் அளித்த புகாரை அங்கிருந்த வேளாண் உற்பத்தி சந்தைக் குழு உறுப்பினர் சுல்தான் சிங்கிடம் கொடுக்கச் சென்றார். புகாரைப் பெற்றுக்கொண்ட சுல்தான் சின்ங்கிடம் சோனாலி போகட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதத்தின் போது திடீரென தனது காலில் இருந்த செருப்பைக் கழட்டி சுல்தான் சிங்கை சரமாரியாக சோனாலி போகட் தாக்கத் தொடங்கினார். தன்னை விட்டுவிடும்படி கேட்ட சுல்தான் சிங்கை தொடர்ந்து அடித்து கொலை மிரட்டல் விடும் வகையில் சோனாலி போகாட் பேசினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தற்போது அது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சுல்தான் சிங் கூறும்போது, “சோனாலி போகாட் புகார் கொடுத்தும் அதனை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன். அவர் அடுத்த கணமே என்னை யார் என தெரிகிறதா? ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது நான் எந்த தவறு செய்யவில்லை என சமாதானம் செய்ய முயற்சிக்கும் போதே செருப்பால் அடிக்கத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனாலி போகட் மீது உரிய நடவடிக்கையை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சுல்தான் சிங் மற்றும் சோனாலி போகட் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரியை தாக்குவது இது முதல் முறையல்ல. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பல அதிகாரிகளை கொடூரமாக பா.ஜ.கவினர் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.