இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், 90 டன் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா, செர்பியா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உதவும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) செர்பிய பிரிவு ட்விட்டரில், “90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் 2வது போயிங் 747 ரக சரக்கு விமானம் இந்தியாவில் இருந்து பெல்கிரேடிற்கு தரையிறங்கியது.” எனப் பதிவிட்டுள்ளது.
இந்த 90 டன் சரக்குகளில் 50 டன் அறுவை சிகிச்சை கையுறைகள் உள்ளன. மேலும், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவர்கள் - மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான முழு உடல் பாதுகாப்பு ஆடைகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, மார்ச் 29ம் தேதி அனுப்பப்பட்ட சரக்கு விமானத்தில், 35 லட்சம் அறுவை சிகிச்சை கையுறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக நாடு முழுவதும் 100 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் மருத்துவர்கள் ரெயின் கோட், ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் உதவி கிடைக்காமலும், பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் கொரோனாவை எதிர்த்துப் போரிடும் மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காத சூழலில் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னணி என்ன எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணைச் செயலாளர் லுவ் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியபோது, செர்பியா விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார்.