இந்தியா

"தகர்ந்து தரைமட்டமாகியிருக்கும் நீதிமன்ற சுதந்திரம்” - ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தகர்த்து மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க அரசு செய்திருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

"தகர்ந்து தரைமட்டமாகியிருக்கும் நீதிமன்ற சுதந்திரம்” - ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
The Print
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வுபெற்ற 4 மாதங்களிலேயே பா.ஜ.க அரசால் மாநிலங்களவை எம்.பி-யாக நியமிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை பா.ஜ.க அரசு தொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தகர்த்து மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க அரசு செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர்கள் ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகள் வரை எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நீண்டகால மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபு ரஞ்சன் கோகோய் நியமனத்தின் மூலம் மீறப்பட்டுள்ளது. மறைந்த பா.ஜ.கவை சேர்ந்த அருண் ஜெட்லி இதே கருத்தை ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். அவரது கூற்றின்படி அந்த இடைவெளி மீறப்பட்டால் நீதிபதியின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசு தலையிடுகிற நிலை ஏற்படும் என்று மிகத் தெளிவாக கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பா.ஜ.க. முக்கியத்துவம் அளித்திருந்தால் இன்றைக்கு இத்தகைய நியமனம் நடைபெற்றிருக்காது. இந்த நியமனத்தின் மூலம் நீதிமன்ற அமைப்பின் மீது கரும்புள்ளி விழுந்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ரஞ்சன் கோகோய் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த தீர்ப்புகள் நரேந்திர மோடி ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. நாடு முழுவதும் மக்களாலும், அனைத்து எதிர்கட்சிகளாலும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்ட ரபேல் ஊழல் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தில் ரஞ்சன் கோகோய் தான் தள்ளுபடி செய்தார்.

"தகர்ந்து தரைமட்டமாகியிருக்கும் நீதிமன்ற சுதந்திரம்” - ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

யார் பாபர் மசூதியை யார் இடித்தார்களோ, அவர்களிடமே அந்த சர்ச்சைக்குரிய இடத்தை வழங்கி, ராமர் கோவில் கட்டுவதற்கு 2.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியவரும் ரஞ்சன் கோகோய் தான். இந்த தீர்ப்பை இந்தியாவில் வாழ்கிற 20 கோடி இஸ்லாமியர்களும் கட்டுப்பாடுடன் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் மனதில் ஆறாத வடு ஏற்பட்டு விட்டதை எவரும் மறுக்கமுடியாது. அதேபோல, அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்காணித்தவரும் இவரே.

இதன்மூலம் அசாமில் வாழ்ந்து கொண்டிருந்த 12 லட்சம் இந்துக்களும், 7 லட்சம் முஸ்லீம்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க அரசு நீக்கியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தவரும் இவரே. இத்தகைய தீர்ப்புகளின் மூலம் பா.ஜ.க.வுக்கு நீதித்துறையின் மூலம் ஏற்பட இருந்த பல்வேறு ஆபத்துக்கள் காப்பாற்றப்பட்டதை எவரும் மறந்திட இயலாது.

"தகர்ந்து தரைமட்டமாகியிருக்கும் நீதிமன்ற சுதந்திரம்” - ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஞ்சன் கோகோய் நியமனம் குறித்து எழுகிற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாத பா.ஜ.க.வினர், முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ராஜ்யசபை உறுப்பினராக காங்கிரஸ் பரிந்துரை செய்தது என்கிற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991 இல் ஓய்வு பெற்ற ரங்கநாத் மிஸ்ரா, 6 ஆண்டுகள் கழித்து 1998 இல் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரஞ்சன் கோகோயைப் போல, குடியரசுத் தலைவரின் நியமனத்தின் மூலமாக ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராக ஆகவில்லை. எனவே, மக்களை திசைத்திருப்புகிற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அதுபோல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சதாசிவம் ஓய்வு பெற்ற மூன்று மாதங்களில் கேரள மாநில ஆளுநராக பா.ஜ.க அரசு நியமித்தது. குஜராத் மாநிலத்தில் செராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சம்மந்தப்பட்ட அமித்ஷாவை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியதற்காகத் தான் ஆளுநர் பதவி சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு அப்போது எழுந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதைப்போல நீதிபதிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு நியமனங்களின் மூலம் சலுகை வழங்க முற்பட்டால் நீதிமன்றங்களின் மாண்பு பறிபோய்விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

"தகர்ந்து தரைமட்டமாகியிருக்கும் நீதிமன்ற சுதந்திரம்” - ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Admin

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக பா.ஜ.க அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் தவே கடுமையான விமர்சனத்தைச் செய்திருக்கிறார். ‘இந்த நியமனம் கடுமையான ஆட்சேபனைக்கு உரியது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் இருந்தபோது செய்ததற்கெல்லாம் பலனாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது” என்று மிக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இதைவிட வேறு கடுமையான விமர்சனத்தை வேறு எவரும் செய்ய முடியாது.

எனவே, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை பெற்றிருக்கிற நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் நீதிமன்றத்தின் மாண்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கு துடைக்க முடியாத களங்கத்தை செய்த குற்றச்சாட்டிற்கு அவர் ஆளாக நேரிடும் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories