சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய உயிர்க் கொல்லி வைரஸான கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்சமயம் இந்த கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை மருத்துவத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டிற்குள் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரை அரங்குகள் போன்றவற்றை அந்ததந்த மாநில அரசாங்கம் மூடி வருகிறது.
அதுமட்டுமின்றி, பிற மாநிலங்களுக்குச் சென்றுவரும் பேருந்துக்கள் மற்றும் ரயில்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்கள், பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கிருமி நாசினிகள் கொண்டு ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னரும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக ஏ.சி ரயில்களில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு கம்பிளி போர்வைகளை அப்புறப்படுத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயிலில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு இனி கம்பளி வழங்கப்படமாட்டாது.
கம்பளிகள் ஒவ்வொரு முறையும் துவைக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அவற்றை மறு உத்தரவு வரும் வரை உடனடியாக அகற்ற வேண்டும். கம்பளிகள் வேண்டுமென்றால் பயணிகளே அவற்றை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.