நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அதன் மீதான முதற்கட்ட விவாதம் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் கூட்டத்தொடரிலேயே டெல்லியில் நடைபெற்ற வன்முறை மற்றும் சிஏஏ உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷா விலகக் கோரியும், வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மக்களவையின் மையப்பகுதியில் வந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டு நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்கள் யாராவது இருக்கையை விட்டு நகர்ந்தாலோ, அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டாலோ இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மிரட்டும் தொணியில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது விவாதிக்காமல், அவர்களையே சபாநாயகர் மிரட்டுவது நியாயமில்லை என எம்.பி.,க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.