இந்தியா

இஸ்லாமியர்கள் பற்றி தொடர்ந்து அவதூறு - பா.ஜ.க எம்.எல்.ஏவை கைது செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், மசூதிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இஸ்லாமியர்கள் பற்றி தொடர்ந்து அவதூறு - பா.ஜ.க எம்.எல்.ஏவை கைது செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என மாணவர்கள், அரசியல் கட்சியினர் நடத்திவரும் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக கூறுகின்றன. பிரதமர் மோடி முதல் கீழ்மட்ட அளவில் இருக்கும் பா.ஜ.க தொண்டர்கள் வரை ஒரே வசனத்தை மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

மேலும் சில பா.ஜ.க தலைவர்கள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை மிகத் தீவிரமாக பரப்பி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா, இஸ்லாமியர்கள் மசூதிகளை ஆயுதங்கள் பதுக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

ரேணுகாச்சார்யா
ரேணுகாச்சார்யா

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா, “இந்தியாவில் இஸ்லாமியர்கள் மசூதிகளை ஆயுதங்கள் பதுக்கிவைக்கவே பயன்படுத்துகிறார்கள். மசூதியில் தொழுகை நடக்கிறதா? மசூதியை வைத்துக்கொண்டு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு இருக்கிறீர்களா?

இனிமேல் உங்களுக்கு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்க முடியாது. அதற்குப் பதில் இந்த நிதியை இந்துக்களுக்கு திருப்பி அளிப்பேன்” என்று பேசினார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன்முறையை தூண்டும் விதத்திலும் மத நம்பிக்கைக்கு எதிராகவும் பேசிய வழக்கில் கைது செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories