ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வசதி, இணைய வசதி, லேண்ட்லைன் வசதி இணைப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல பொதுநல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதில், ‘‘தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பை காப்பது நீதிமன்றத்தின் கடமை. இணையதளம் என்பதும் கருத்துரிமையின் ஒரு பகுதியே. மிக மிக அசாதாரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும். காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒரு வாரத்திற்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது :
‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய அரசின் பிடிவாதம் மற்றும் ஆதிக்க மனப்பான்மைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. காஷ்மீரில் நடைபெற்ற கெடுபிடிகளுக்கு முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கே காரணம். இதற்கு அவர் முழு பொறுப்பேற்க வேண்டும். தற்போது கோவா மாநிலத்தின் ஆளுநராக உள்ள அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.