குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது எனவும், இது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்குமான அச்சுறுத்தல் எனவும் போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூடவே, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் மோடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆவணங்கள் இல்லாத இஸ்லாமியர்கள் தடுப்பு காவல் மையத்திற்கு (Detention Center) அனுப்பப்படுவார்கள் என பா.ஜ.க அரசு கூறி வருகிறது. ஆனால், அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடியோ, இந்தியாவில் தடுப்பு காவல் மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், வட மாநிலங்களில் தடுப்பு காவல் மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டுள்ள வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஆர்.எஸ்.எஸின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார்” என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து மோடி பொய் உரைக்கிறார் என்பதை குறிப்பிட்டு #Jhootjhootjhoot என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.