இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனைத்தடுக்க மத்திய மாநில அரசுகளும், போக்குவரத்து காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இருப்பினும், சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், 2018ம் ஆண்டு நடைப்பெற்ற சாலை விபத்துக்கள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 ஆக பதிவாகியுள்ளது. இது 2017ம் ஆண்டை விட மூன்றாயிரம் விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
ஒரு நாளில் சராசரியாக ஆயிரத்து 200 விபத்துகளும், அதில் 415 உயிரிழப்புகள் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற விபத்துகளில் 64.4 % சதவிகித விபத்துகளுக்கு, தவறான திசையில் (எதிர் திசையில்) வாகனத்தை செலுத்துவதுதான் காரணம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், தமிழகம் மூன்றாமிடத்திழும் உள்ளன. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் தான் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.
29 சதவிகிதம் பேர் ஹெல்மெட் அணியாமலும், 16 சதவிகிதம் பேர் சீட் பெல்ட் அணியாமலும், 2.8 சதவிகிதம் பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும், 2.4 சதவிகிதம் பேர் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதாலும் உயிரிழந்துள்ளனர்.