இந்தியா

அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவி இடைநீக்கம்!

அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக் கழக மாணவி நேகா யாதவை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவி இடைநீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நேகா யாதவ். அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண போராட்டத்தில் ஈடுபடுபவர். உத்தர பிரதேச பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தொடர்ந்து அடுக்குமுறையில் ஈடுபட்டதாக கூறி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் முன்நின்று நடத்தியவர்.

இதனிடைய கடந்த ஆட்சியின் போது, பா.ஜ.க அரசு மாணவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்தப் போராட்டத்தின் போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடி, அமித் ஷா ஆகியோரைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவி இடைநீக்கம்!

இதையடுத்து, நேகா மற்றும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடப்பு கல்வியாண்டு முடிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனைக் கண்டித்து மீண்டும் நேகா மாணவ - மாணவியரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவி நேகாவை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், உடனடியாக விடுதியிலிருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் நடைபெற்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவி நேகா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீனமாக விதிகளை மீறி நடந்துகொண்டதாக என்னை இடைநீக்கம் செய்துள்ளனர். இது உண்மை அல்ல. உண்மையான காரணம் என்னவென்றால் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கடந்த ஆண்டு பா.ஜ.க அரசை கண்டித்து அமித்ஷாவிற்கு எதிராக மாணவர்களாகிய நாங்கள் கருப்புக் கொடி காட்டி முழக்கங்களை எழுப்பியதாலும் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மேலும், நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று நான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளேன். நான் இங்குள்ள முறைகேடுகளை எதிர்ப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தினர், இனி எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக கூறுகின்றனர்.

எந்தத் தவறும் செய்யாத நான் மன்னிப்பு கடிதம் அளித்து உறுதி அளிப்பது நியாயமல்ல, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த பிரச்னையை எதிர்கொள்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories