இந்தியா

திஹார் சிறையில் உள்ள கைதியின் முதுகில் ‘ஓம்’ என்று சூடு வைத்த சிறை கண்காணிப்பாளர் ! 

திஹார் சிறையில் உள்ள கைதியின் முதுகில் ஓம் என்ற இந்து மத அடையாளம் சூடு வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திஹார் சிறையில் உள்ள கைதியின் முதுகில் ‘ஓம்’ என்று சூடு வைத்த சிறை கண்காணிப்பாளர் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லி சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நபீர் (34). இவர் டெல்லி திஹார் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி நபீர் தனது அறையில் உள்ள மின்சார அடுப்பு சரியாக இயங்கவில்லை என சிறை 4-ன் கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் புகார் கூறியிருக்கிறார்.

இந்தப் புகாரால் ஆத்திரமடைந்த சவுகான், கைதி நபீரை தனது அலுவகத்துக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு அவரை சவுகானும் இன்னும் சில சிறை அதிகாரிகளும் இணைந்து சரமாரி தாக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு உணவேதும் கொடுக்காமல் துன்பப்படுத்தியுள்ளனர். மேலும், சூடான உலோகத்தால்நபீரின் முதுகில் ஓம் என்ற அடையாளம் பொரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட நபீர் நீதிபதி முன்னால் தனது சட்டையைக் கழற்றி முதுகிலிருந்து சூடு அடையாளத்தைக் காட்டியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். முதுகில் உள்ள அடையாளம் குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் திரட்டி சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். நபீரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நபீர் 4-ம் எண் சிறையிலிருந்து 1-ம் எண் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

நபீர் டெல்லியில் உள்ள இர்ஃபான் கேங் என்ற ஆயுதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறைக்கு வருபவர் மட்டுமல்ல சிறைக்கு வந்தாலும் கூட எப்போதும் விதிமுறைகளை மீறி சர்ச்சை செய்பவர் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories