தேர்தல் 2024

“மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்” - செல்வப்பெருந்தகை அறிக்கை !

“மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்” - செல்வப்பெருந்தகை அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், பெண்கள் நலன், விவசாயிகள் நலன் என அனைவருக்குமான அறிக்கையாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அறிக்கைக்கு நாடு முழுவதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தலைநகர் தில்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தீர்வு காண்கிற வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

“மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்” - செல்வப்பெருந்தகை அறிக்கை !

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சமூகநீதியை நோக்கமாகக் கொண்டு தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து மேற்கொண்ட பரப்புரையின் அடிப்படையில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, தமிழக மக்களின் கோரிக்கையான நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பப்படி நடத்திக் கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும், ஒன்றிய அரசு பணிகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்கள் தற்சார்பு நிலையுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசில் பட்டியலினத்தவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை தடுக்க ‘ரோகித் வெமுலா” சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று கூறுவது சிறப்பான வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகும்.

“மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்” - செல்வப்பெருந்தகை அறிக்கை !

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்படும், இதன்மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் முழுமையான இடஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதேபோல, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு 10 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கூடியதாகும்.

பொதுப்பட்டியலில் உள்ள பல துறைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றி மாநில உரிமைகளை பறித்திருப்பதற்கு முடிவு கட்ட தேர்தல் அறிக்கை உறுதி கூறியிருக்கிறது. செஸ் வரி வசூலில் மாநிலங்களை புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 400 ஆக அதிகரிக்கப்படும். மீனவ மக்களின் படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்."

banner

Related Stories

Related Stories