தி.மு.க

“ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” அறிவிப்பை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை !

“ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை”, “அகில இந்திய நீதித்துறைத் தேர்வு” போன்ற அறிவிப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” அறிவிப்பை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் ஆதிக்க மேலாண்மை கொண்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” “மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும்” என்றும், எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்ப்பதைப் போல,  அறிவித்து, கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான  காரியத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உள்ள மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பது,  அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

“பொது விநியோகத்திட்டத்தில் ஒருங்கிணைந்த நிர்வாகம் கொண்டு வருகிறோம்” என்று “உள்நோக்கத்துடன்” கூடிய ஒரு திட்டத்தின் கீழ் கிராமங்களில் அரிசி பருப்பு வழங்குவதைக் கூட மத்திய பா.ஜ.க. அரசு செய்யும் என்பது, மத்திய-மாநில உறவை கை கொட்டி நகைக்கும் கேலிப் பொருளாக்கும் செயலாகும். மத்திய உணவு அமைச்சர் திரு.ராம்விலாஸ் பாஸ்வான் அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்தும், இது போன்று மாநில உரிமைகளை மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் நடவடிக்கைக்கு துணை போவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை. அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என்பதை மத்திய உணவு அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை. மத்திய பா.ஜ.க. அரசும் புரிந்து கொள்ள மறுக்கிறது. அதுவும் வருகின்ற 30.6.2020க்குள் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் வந்து விட வேண்டும் என்றும் “ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” திட்டம் அந்த தேதிக்குள் அமல்படுத்தப்பட்டு விடும் என்றும் “கெடு” விதிப்பதும் எதேச்சதிகாரமான, தன்முனைப்பான நிர்வாகத்தின் உச்சகட்டம்.

நீதித்துறையில் - குறிப்பாக,  கீழமை நீதிமன்றங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் தேர்வு செய்யும் பொறுப்பு மாநில அரசிடமும், அவர்களின் நிர்வாகக் கட்டுப்பாடு உயர்நீதிமன்றத்திடமும்தான் இருக்கிறது. “இனிமேல் மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரையும் நாங்களே தேர்வு செய்வோம்” என்று மத்திய சட்ட அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது- பிரதமர் திரு நரேந்திர மோடி கூறி வரும் “கூட்டுறவுக் கூட்டாட்சி” முழக்கத்தை கேலிக்குரியதாக்கும் செயல்.

மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை அகில இந்திய நீதித்துறைத் தேர்வு மூலம் தேர்வு செய்வோம் என்றும்- அதற்காக தனியாக ஒரு ஆணையம் அகில இந்திய அளவில் அமைப்போம் என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர்  சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மத்தியில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்ற சர்வ அதிகார உள்நோக்கம் நிறைந்தது. இதை திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் ஏற்காது.

ஆகவே “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை”, “அகில இந்திய நீதித்துறைத் தேர்வு” போன்ற அறிவிப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து- மத்திய அரசை “எஜமானராகவும்”, மாநில அரசுகளை “எடுபிடிகளாகவும்”  “ தலை ஆட்டும் பொம்மைகளாகவும்” நடத்த  முயற்சி செய்வது, அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை தகர்த்தெறியும் அராஜக மனப்பான்மை கொண்ட போக்கு என்றே எண்ணிட வேண்டியிருக்கிறது.

ஆகவே  அ.தி.மு.க அரசு இந்தத் திட்டங்களை ஆரம்ப நிலையிலேயே கடுமையாக எதிர்த்து- ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்றவற்றை அடியோடு கைவிட வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அசைந்து கொடுக்குமா அதிமுக அரசு? மாநில சுயாட்சி கொள்கைகாவது தன் குரலில் மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்கத் துணியுமா? '' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories