கன்னடத்தில் பிரபல நடிகராக இருப்பவர் நாகபூஷணா. இவர் 2018-ல் வெளியான சங்கஷ்ட கர கணபதி' என்ற கன்னட படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சமந்தா நடிப்பில் வெளியான 'யூ டர்ன்' படத்தில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து கன்னடத்தில் வெளியான 'இக்கத்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், கன்னடத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் கன்னடத்தில் மட்டும் 15 படங்கள் நடித்துள்ளார். இக்கத் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு நேரத்தில் நாகபூஷணா, பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டேஎன்ற பகுதிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் கார் ஒரு வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வந்தபோது, அங்கே நடைமேடையில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதி மீது, அந்த கார் வேகமாக மோதியது. இதனை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை வரவழைத்து தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரேர்னா (48) என்ற பெண் பலியானார். அவரது கணவர் கிருஷ்ணாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கார் ஏற்றிய நடிகர் நாகபூஷணாவை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.