தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் தனுஷ். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பலத்துறைகளில் பணியாற்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.
இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம்.
நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓம் நமச்சிவாயா, அன்பை பகிருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.