சினிமா

‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு : இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ’எந்திரன்’ கதை திருட்டு வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு : இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடிகர் ரஜினி, ஐஸ்வர்யா ராய், நடிப்பில் வெளியான படம் ’எந்திரன்’. இந்தப் படத்தின் அடுத்த பாகம், எந்திரன் 2.0 எனக் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியானது.

இந்தநிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்தக் கதையை கடந்த 1996ஆம் ஆண்டு ”உதயம்” என்ற பத்திரிகையில் ”ஜூகிபா” என்ற தலைப்பில் தொடர்கதையாக எழுதியதாகவும், இயக்குனர் ஷங்கர் அந்தக் கதையை தன்னிடம் அனுமதி பெறாமல் ‘எந்திரன்’ என்று படமாக எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தக் கதைக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இயக்குனர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை ஒரு முறை கூட ஆஜராகவில்லை. இதே எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுத் தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு : இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையைத் தடை செய்யக் கோரி இயக்குநர் ஷங்கர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்தநிலையில் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இயக்குனர் ஷங்கர் தரப்பு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்தக் கதை திருட்டு வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories