சினிமா

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது பணமோசடி புகார்!

டிராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது பணமோசடி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கி தயாரித்த படம் டிராபிக் ராமசாமி. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

’டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை அளிப்பதாகக் கூறி பிரமானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்டு உரிமத்தையும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் புகார் அளித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியம் கனடா நாட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் அவரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் தனது தயாரிப்பில் வெளிவந்த டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை அளிப்பதாகக் கூறி அவரிடம் 21 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

அதனையடுத்து தொலைபேசியில் தனது நண்பரை தொடர்புகொண்டு பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் அப்படத்தினை தானே வெளியிடுவதாகவும், அதற்காக பெற்ற பணத்தை விரைவில் திருப்பி அளிப்பதாகவும் கூறி அழைப்பை துண்டித்ததாகவும் கூறினார்.

ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணம் கைக்கு வராததால் பிரமானந்தம் சுப்பிரமணியம் தனது நண்பரான தன்னை தொடர்புகொண்டு பணத்தை பெற்று தருமாறு கூறியதாகவும், இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி அளிக்க முடியாது எனக்கூறி தனக்கும் தனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உயிர் பயத்தால் இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனக்கும் தனது நண்பருக்கும் உரிய பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும் எனவும் தனது நண்பரின் பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories