உலகம்

"பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது" - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

மேலும் காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. மேலும் காசாவில் இருப்பவர்கள் அதன் தென்பகுதிக்கு செல்லுமாறும் இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இஸ்ரேலுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரித்தாக அறிவித்தன. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தனி பாலஸ்தீன் ஒருபோதும் உருவாகப்போவது இல்லை. பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது"என்று கூறியுள்ளார்.

Also Read: "தமிழ்நாடு திறன்வாய்ந்த மாநிலமாக இருக்க இரு மொழி கொள்கைதான் காரணம்" - அமைச்சர் அன்பில் மகேஸ் !