உலகம்

அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு : 22 மாகாண நீதிமன்றங்களில் வழக்கு !

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 26 கோப்புகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதில், பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். இந்த உத்தரவுக்கு தற்போது அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

மேலும், இந்த உத்தரவால் 20,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. தற்போது பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து 22 மாகாண நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை வழங்கும் திட்டம்

அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்கு தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டம் 1868ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. தற்போது இதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப்.

அவர் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய உத்தரவில், தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ, சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது தாய் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லது மாணவர், சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எப்படி இருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு தாமாக குடியுரிமை கிடைக்காது என்பது டிரம்ப் அரசின் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முல்லைப் பெரியாறு அணை : ஏழு உறுப்பினர்கள் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவு !