உலகம்
திடீரென கைது செய்யப்பட்ட Telegram நிறுவனர்... உலகையே அதிரவைத்த நிகழ்வுக்கு காரணம் என்ன?
நம் அன்றாட வாழ்வில் இணையம் இல்லாமல் நம்மால் இயங்க மிகவும் கடினம். இந்த இணையம் நாளடைவில் மனிதரின் வளர்ச்சியை தாண்டி, பல கேடான விஷயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களால் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட பல ஆப்களை பயன்படுத்தி தங்கள் தகவல் பரிமாற்றங்களுக்காக எளிதாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் முக்கிய இடம்பிடித்துள்ள ஒன்றுதான் Telegram. இந்த ஆப் தற்போது உலகின் டாப் இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த சூழலில் Telegram ஆப்பை கண்டுபிடித்த பாவெல் துரோவ் தற்போது பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தனது சொந்த விமானத்தில் அஜர்பைஜானில் இருந்து சென்ற பாவெல் துரோவை, பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றசாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ், Telegram செயலியை உருவாக்குவதற்கு முன்பு 2006-ம் ஆண்டு VKontakte என்ற செயலியை உருவாக்கினார். இது ரஷ்யா நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு சமூக ஊடக தளம். நாளடைவில் இதில் அரசியல் குறித்த தகவல் பரிமாற்றங்கள் குறித்து, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு பாவெல் துரோவ் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர் டெலிகிராம் செயலியை உருவாக்கியபோதும் அரசு தரப்பில் இருந்து பல எதிர்ப்புகளை சந்தித்த அவர், வேறு வழியின்றி தனது சொந்த நாட்டை விட்டு கடந்த 2014-ம் ஆண்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் டெலிகிராம் தடை செய்யப்பட்டது. தற்போது இவர் செயின்ட் கிட்ஸ், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளார்.
தற்போது உலக அளவில் முக்கிய செயலியாக விளங்கும் டெலிகிராம் பலருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதியில் உள்ளது. குறிப்பாக பி.எச்டி படிக்கும் மாணவர்களுக்கு இதில் இருந்து எளிதாக அவர்களுக்கு தேவையானவை கிடைக்கிறது. ஒரு பக்கம் நல்லது என்றாலும், மறுபக்கம் போதை பொருள் விநியோகம், சட்டத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியை ஒரு சிலர் எளிதாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் குற்றங்களுக்கு இந்த செயலி அனுமதி வழங்கி வருவதாக கருத்துகள் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை உலக மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் கூட அண்மையில் இளநிலை நீட் தேர்வு வினாத்தாள், நெட் தேர்வின் வினாத்தாள் உள்ளிட்டவைகள் டெலிகிராமில் கசிந்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?