உலகம்

விவாத நிகழ்ச்சியில் அடித்துக்கொண்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்: நேரடிஒளிபரப்பில் நடந்த அதிர்ச்சி!

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

அதில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் இம்ரான் கான் குறித்து விவாத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான் சார்பில் அவரது கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட் என்பவர் கலந்துகொண்டுள்ளார். மேலும், ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான்

இந்த நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் கட்சி வழக்கறிஞனருக்கும் ஆளும் கட்சி செனட்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பான நிலையில், இம்ரான் கானின் வழக்கறிஞர் ஆளும் கட்சி செனட்டரை தாக்க, பதிலுக்கு அவரும் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருக்கும்போது நடந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். எனினும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், அது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போலீசாருக்கு பயந்து ஓட்டம்.. மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள்.. சிக்கிய வயல் உரிமையாளர் !