உலகம்

10 வினாடி பாலியல் தீண்டல் குற்றமல்ல.. இத்தாலி நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி.. கொதித்தெழுந்த பொதுமக்கள் !

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வழக்கம் போல பள்ளிக்கு சென்று அங்கு தனது வகுப்பறைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த பள்ளியின் காவலரி அந்த சிறுமியை தூக்கியுள்ளார்.

அதோடு நிற்காமல் சிறுமியின், கீழாடையை இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவலாளி அவரை கீழே இறக்கிவிட்டு விளையாட்டுக்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து அந்த சிறுமி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், பள்ளி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளதால் அதை குற்றமாக கருத முடியாது எனக் கூறி, அந்த காவலாளியை விடுதலை செய்வதாக அறிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்து ‘#10secondi என்ற தலைப்பில் பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும், முன்னணி நடிகர்கள் பலரும் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகியின் மகன்.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!