உலகம்
தொடரும் உள்நாட்டு மோதல்.. சொந்த ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 22 பேர் பலி.. சூடானில் சோகம் !
சூடானில் 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் சூடானை ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் ஆண்டு வருகிறார், சூடானின் ராணுவம் முழுக்க முழுக்க இவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
சூடானில் உள்ள சுரங்கங்களை பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையை (RSF) அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார். அதன் தளபதியாக முகமது ஹம்தன் டாக்லோ இருந்து வருகிறார். ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுவந்துள்ளது.
இதன் காரணமாக விரைவில் துணை ராணுவ படையை கலைத்து அதனை ராணுவத்தில் இணைக்க ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதனை துணை ராணுவ படையின் தளபதி முகமது ஹம்தன் டாக்லோ கடுமையான எதிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் திடீரென துணை ராணுவ படையினர் நாடு முழுவதும் பரவி ராணுவத்தினர் மேல் தாக்குதலைத் தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த மோதலில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த மோதல் காரணமாக இதுவரை சுமார் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா பெரும்தொற்று, உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக உருகுலைந்துள்ள சூடானை இந்த உள்நாட்டு போர் மேலும் சீரழித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது சூடானில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடான் தலைநகர் கார்டூம் அருகே உள்ள ஓம்தூர்மன் என்ற நகரில் குடியிருப்பு பகுதியில் திடீரென வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
தற்போது வரை இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலை இது வரை யார் நடத்தியது என்று தெரியாத நிலையில், இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் சூடானில் இதே பணியில் நடந்த வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!
-
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
-
“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
-
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6% அசுர வளர்ச்சி! : முழு விவரம் உள்ளே!