உலகம்

ஒருவழியாக Twitter CEO-வை கண்டுபிடித்த எலான் மஸ்க்.. யார் அந்த முட்டாள் என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

உலகின் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தான் பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை இவர் செய்து வருகிறார். இவரது நடவடிக்கை அங்கிருக்கும் ஊழியர்களுக்கு நாளுக்கு நாள் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதலில் ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்த இவர், அடுத்ததாக பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்தார். சுமார் 50%-க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டதால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வயிற்றில் நெருப்பை கட்டி இருப்பது போல் தினமும் வாழ்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (CEO ) பதவியில் தான் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பு தொடங்கிய 4 மணி நேரத்திலேயே சுமார் 90 லட்சம் பேர் அதில் தங்கள் வாக்குகளை பதிவிட்டு இருந்தனர்.இந்த வாக்கெடுப்புக்கான முடிவுகளில் வாக்கு செலுத்தியவர்களில் 57.5 % பேர் எலான் மஸ்க் CEO பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 42.5% பேர் மட்டுமே எலான் மஸ்க் CEO பதவியில் தொடரலாம் என கூறியுள்ளனர்.

அதன்பின்னர் இது குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் "பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் CEO பதவியிலிருந்து, நான் ராஜினாமா செய்கிறேன். அதன்பின்னர் மென்பொருள் மற்றும் சர்வர் பிரிவுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்" என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின் தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, டுவிட்டரின் புதிய சிஇஓ என்றும், மற்றவர்களை விட இது சிறந்தது என்றும் பதிவிட்டு விமர்சனத்தை சந்தித்தார்.

இந்த நிலையில், தற்போது ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய பெண் CEO-வை தேர்ந்தெடுத்ததாகவும், 6 வாரத்தில் அவர் தனது பணியை தொடங்குவார் என்றும் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்துக்கு முட்டாளை CEO பதவியில் அமர்த்துவேன் என்று எலான் மஸ்க் கூறிய நிலையில், மஸ்க் கூறிய அந்த முட்டாள் யார் என்பதை அறிய ஆர்வமாக இருப்பதாக சமூக வளைதள பயனர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் லிண்டா யாகாரினோ என்பவர் அந்த பொறுப்புக்கு வருவார் என சிலர் யூகம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: செல்போனுக்கு வந்த link .. கிளிக் செய்தவரின் வங்கியில் இருந்து மாயமான பணம் : போலிஸ் விசாரணையில் பகீர்!