உலகம்

McDonald's பர்கரில் எலியின் மலம்.. நீதிமன்றம் வரை சென்ற பெண்ணுக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு.. என்ன நடந்தது ?

தற்போதுள்ள காலத்தில் அனைத்து மக்களும் துரித உணவுகளுக்கு பழக்கமாகியுள்ளனர். குறிப்பாக மேற்கத்திய உணவுகளான பீட்சா பர்கர் உள்ளிட்ட உணவுகளை பலரும் விரும்பி உண்டு வருகின்றனர். இதற்காக என்று பிரத்யேகமாக KFC, டாமினோஸ், மெக் டொனால்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுக்க இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான McDonald's நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சூழலில் ரெஸ்டாரென்ட் கிளை பிரிட்டன் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் Cheese Burger ஆர்டர் செய்துள்ளார்.

இந்த பர்கர் அவரது வீட்டுக்கு நேரடியாக டெலிவரி ஆகியுள்ளது. அதனை பெற்ற அந்த பெண் சாப்பிட தொடங்கியுள்ளார். அப்போது அந்த பர்கரில் எலியின் மலம் இருந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண், ஆத்திரமடைந்து நிறுவனத்துக்கு நேரடியாக தொடர்பு கொண்டு திட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து வால்தம் பாரஸ்ட் கவுன்சிலிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதன்பேரில் அங்கிருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ரெஸ்டாரண்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அந்த கடை சுகாதாரமில்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், பெண் கொடுத்த புகாரை மாவட்ட நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர்.

தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதற்கான தீர்ப்பு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி, சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட McDonald's நிறுவனமானது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை உட்பட 600000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,90,37,850) நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Also Read: கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!